Wednesday, November 2, 2011

விமர்சனம்

7ஆம் அறிவு


போதி தர்மன் என்னும் பல்லவ இளவரசன், புத்த மதத் தொண்டாற்ற சீனா செல்கிறார். அங்கு, மக்களுக்கு ஏற்படும் கொடிய நோயை குணப்படுத்துகிறார். தற்காப்புக் கலையை கற்றுக்கொடுத்து, மக்களை பாதுகாக்கிறார். அங்குள்ள மக்களால் புத்தருக்கு இணையாகப் போற்றப்படுகிறார். வரலாற்றின் பக்கங்களில் காணப்படாத இந்த நிகழ்வுடன், இன்றைய தலைமுறையினரின் ஆராய்ச்சி, தியாகம் மற்றும் வருங்கால விஞ்ஞான வளர்ச்சியையும் சொல்கிறது படம்.

சயின்டிஸ்ட் மாணவியான ஸ்ருதி, போதி தர்மன் மரபணு பற்றி ஆராய்கிறார். சர்க்கஸ் கலைஞன் அரவிந்திடம் (சூர்யா) போதி தர்மன் மரபணு இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். அவருக்குத் தெரியாமலேயே அதை ஆராய்ந்து வருகிறார். இந்நிலையில், இந்தியா மீது சீனா, பயோவார் தொடுக்கிறது. கொடிய நோய்க்கிருமியைப் பரப்ப, வில்லன் ஜானியை இந்தியாவுக்கு அனுப்புகிறது. அவன் இங்கு நோயைப் பரப்ப, அது வேகமாகப் பரவுகிறது. நோயை குணப்படுத்தும் மருந்து என்ன என்பது, போதி தர்மன் சீனாவுக்கு கற்றுக்கொடுத்தது. போதி தர்மன் குறித்த மரபணு சோதனை நடத்தும் ஸ்ருதி அதில் வென்றால் மீண்டும் போதி தர்மன் குணங்கள் அரவிந்துக்கு வந்து விடும். அப்படி வந்தால், நோய்க்கான மருத்தைக் கண்டுபிடிக்க முடியும். ஜானியின் இன்னொரு அசைன்மென்ட், ஸ்ருதியை போட்டுத்தள்ளுவது. ஜானி திட்டம் நிறைவேறியதா? ஸ்ருதி ஆராய்ச்சி வென்றதா? சூர்யா, போதி தர்மனாக மாறினாரா என்பது கதை.

முதல் 20 நிமிடப் படம், ஹாலிவுட் பிரமாண்டத்தின் பிரதிபலிப்பு. பனி படர்ந்த மலைகள், நிறம், உயரம் அனைத்திலும் மாறுபட்ட மக்கள், இவற்றுக்கு நடுவில் தமிழன் ஒருவன், 1600 வருடங்களுக்கு முன் கால்பதித்ததை காட்சியாகப் பார்க்கும்போது மெய்சிலிர்க்கிறது. காந்த விழிகள், கருணைப் பார்வை, நொடியில் எதையும் செய்து முடிக்கும் வேகம் என, சூர்யாவின் ஒவ்வொரு அசைவும் ஆச்சரியம். கதை இந்த நூற்றாண்டுக்குள் வரும்போது, அச்சு அசலான முருகதாஸ் படமாகிறது. சர்க்கஸ் கலைஞனான அரவிந்த், சர்க்கஸை பிரபலப்படுத்த ஆட்டம் போடுவதில் இருந்து, ஸ்ருதியின் ஆராய்ச்சிக்கான நட்பை காதலாக எடுத்துக்கொண்டு தவிப்பது வரை அருமை. சிக்ஸ்பேக் உடம்பு, நரம்பு முறுக்கேறும் சண்டை, சர்க்கஸ் சாகசம் என சூர்யாவின் உழைப்பு அளவிட முடியாத உயரத்தில் நிற்கிறது.

ஸ்ருதி, கடமையும், காதலும் மிக்க ஆராய்ச்சியாளராக வருகிறார். ஆராய்ச்சிக்காக, சூர்யாவிடம் விருப்பம் இல்லாமல் பழகுவதும், அவர் தன் காதலைச் சொல்லும்போது, ‘உன்னை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் ஒரு பொண்ணு கையை தொட்டாலே காதல் வந்துருது’ என்று சூர்யா மீது எரிந்து விழுவதும், சூர்யாவை போதி தர்மனாக்கி நாட்டைக் காப்பாற்ற துடிப்பதுமாக, நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். ஹாலிவுட் வில்லன் ஜானி ட்ரை நுயென், ஆக்ஷனில் பின்னி எடுப்பார் என்றால், நோக்கு வர்மத்தால் மற்றவர்களை மயக்கி, அவர்களை வைத்தே சண்டை போட்டு விட்டு, இவர் தலையை மட்டும் திருப்பித் திருப்பி பார்ப்பது ஏமாற்றம். எல்லாவற்றுக்கும் சேர்த்து கிளைமாக்சில் சூர்யாவோடு மோதி, சண்டை தாகத்தை தீர்த்து வைக்கிறார்.

ஹாரிஸின் இசையில், பாடல்கள் வெரைட்டி. சீனாவில் நடக்கும் காட்சிகளில், அந்நாட்டின் இசைப் பின்னணி கதைக்கும், காட்சிக்கும் வலு சேர்க்கிறது. ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவை ஹாலிவுட் தரம் என்று சொல்லிவிட முடியாது. அதையும் தாண்டிய உழைப்பை அளித்துள்ளார். பீட்டர் ஹெய்னின் ஆக்ஷனும், ராஜீவனின் அரங்கங்களும் கதையுடன் நம்மை கைப்பிடித்து கூட்டிச் செல்கிறது. படத்தில் குறைகள் இருந்தாலும், ஒரு பெரும் தமிழ் வரலாற்றை சிறு எபிசோடுக்குள், பிரமாண்டமாகச் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே பாராட்டலாம் இயக்குனரை. நல்ல படம் தர வேண்டும் என்பதற்காக அபார முயற்சியொன்றில் இறங்கிய ஏ ஆர் முருகதாஸுக்கு பாராட்டுகள்!

No comments:

Post a Comment